அடிப்படைவாத வகுப்புகளில் கலந்துக்கொண்டதாக பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிமின் மாமனார் உட்பட மூவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கமைய, பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது உதவியாளர்களால் நடத்தப்பட்டதாக கூறப்படும் அடிப்படைவாத வகுப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கமைய இத்தகைய வகுப்புகளை நடத்தியதாக இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த அடிப்படைவாத வகுப்புகளில் கலந்து கொண்டதாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டி – கெக்குணுகொல்ல பகுதியில் வைத்து நேற்று (22) பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர். 40, 52 மற்றும் 55 ஆகிய வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுள் பயங்கரவாதி ஸஹ்ரானின் மனைவியின் தந்தையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள சந்தேக நபர்களை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.