அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க, தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஊடகத் துறையில் நான்கு தசாப்த கால அனுபவத்தைக் கொண்டுள்ள மொஹான் சமரநாயக்க, இதற்கு முன்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்தார்.
'தவச' பத்திரிகையின் உதவி ஆசிரியராக ஊடகத் துறைக்குள் பிரவேசித்த அவர், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் உதவி ஆசிரியராக சேவையாற்றியதோடு, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவின் பணிப்பாளராக ஐந்து வருடங்கள் பதவி வகித்தார்.
அதனைத் தொடர்ந்து, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் தகவல் மையத்தின் தலைவராக நீண்ட காலம் சேவையாற்றிய அவர், அதன் பின்னர் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் இப்பதவியில் இருந்த நாலக கலுவெவ அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், பதில் பணிப்பாளர் நாயகமாக, ருவன் சத்குமார நியமிக்கப்பட்டிருந்தார்.
இன்று (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற கடமையேற்பு வைபவத்தில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு, ஊடகத்துறை அமைச்சு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் உயர் பதிவிகளிலுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.