நடப்பு திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் மாடல் அழகி ச்சூலா பத்மேந்திர ஆகிய இருவரும் கொழும்பு பிரதான் நீதவான் நீதிமன்றத்தால் தலா ரூபா ஒரு லட்சம் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை திருமதி அழகி போட்டியின் போது நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.
சந்தேக நபர்கள் மீது திருமதி அழகு ராணியாக முடிசூட்டப்பட்ட புஷ்பிகா டி சில்வாவுக்கு சிறு காயங்கள் ஏற்படுத்தியமை, பயமுறுத்தல், அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆயினும், குறித்த வழக்கை சுமுகமாக முடிப்பதற்கு முறைப்பாட்டாளரான புஷ்பிகா டி சில்வா தயாராகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
இதன்போது, அழகுப் போட்டி நடைபெற்ற நெலும் பொகுண மண்டபத்திற்கு சுமார் ரூ. 4 இலட்சம் பெறுமதியான சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, கறுவாத்தோட்டை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
அதற்கமைய, இது தொடர்பில் ஏற்பட்டுள்ள சரியான நஷ்டத்தை கணக்கிட்டு, சட்ட மாஅதிபரின் ஆலோசனையைப் பெறுமாறும் தெரிவித்த நீதவான், அது தொடர்பான அறிக்கையை வழங்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதன்போது தமது கட்சிக்காரரினால் எந்தவொரு இழப்பும் மேற்கொள்ளப்படவில்லையென, கரோலின் ஜூரி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விளக்கமளித்தனர்.
ஆயினும், குறித்த வழக்கை ஜூன் 28 வரை ஒத்திவைப்பதாக அறிவித்த கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல, குறித்த இருவருக்கும் பிணையில் செல்வதற்கான உத்தரவையும் வழங்கினார்.