ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுப்போம். கடந்த அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டதால்தான் குண்டு வெடிப்பு ஏற்பட்டது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) இடம்பெற்ற விளையாட்டில் ஊக்க பதார்த்தம் பயன்பாட்டிற்கெதிரான சமவாய சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஏப்ரல் தாக்குதலை தடுக்க முடியாமல் போவர்கள் தற்போது எம்மீது குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் பொறுப்பில்லாமல் செயற்பட்டதால்தான் ஏப்ரல் தாக்குதல் இடம்பெற்றது. கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்றது என தெரிவித்து நாங்கள் அதனைவைத்துக்கொண்டு அரசியல் செய்யவில்லை. அதுதொடர்பாக ஆணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். தற்போது விசாரணை இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டிருக்காமல், தாக்குதல் தொடர்பில் யாரையாவது சந்தேகம் என்றால், பொலிஸில் முறையிடுமாறு தெரிவிக்கின்றோம். மாறாக இதனை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும், அன்று மாவனெல்லையில் இடம்பெற்ற புத்தர் சிலையை சேதப்படுத்திவர்களை அரசியல் தலையீடுகளை பயன்படுத்தி விடுவித்தார்கள். அதனை செய்யாமல் இருந்திருந்தால், ஏப்ரல் தாக்குதல் இடம்பெற்றிருக்காது.
என்றாலும் ஏப்ரல் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவந்து தராதரம் பார்க்காமல் தண்டனை பெற்றுக் கொடுப்போம். அதனால் ஏப்ரல் தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு எதிர்க்கட்சியும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.