தீவிர மாரடைப்பு காரணமாக தமிழ் நகைச்சுவை நடிகர் விவேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது விவேக் மயங்கி விழுந்தார் என்றும், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும், பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கூறியுள்ளார். விவேக் சுயநினைவோடு உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமைதான் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அவர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக மக்களிடம் அச்சம் நிலவுவதாகவும், அந்த அச்சத்தைப் போக்கவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர் அப்போது ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதற்காக, சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஜெயந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அவர் ட்வீட்டும் செய்திருந்தார்.
தமது கருத்தான நகைச்சுவைக் காட்சிகளுக்காக, சின்னக் கலைவாணர் என்று புகழப்படும் நடிகர் விவேக், 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்றவர் இவர்.