கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுப்பாராயின் அவரை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோவினால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு இது தொடர்பிலான அறிவிப்பு எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் முற்பகல் 10.00 மணி தொடக்கம் பாராளுமன்ற கூட்டத்தொடரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதால் காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினரை பாராளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கொரொனா தொற்று நிலைமை காரணமாக சுகாதார அதிகாரிகளினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டும் என பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.