காசோலை மோசடி மற்றும் கடன் சம்பந்தமாக ரேடியன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா பங்குதாரராக உள்ள நிறுவனம் தயாரித்த 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்திற்காக, 'ரேடியன்ஸ்' என்ற நிறுவனத்திடம் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.
மேலும், சொத்துக்களை அடமானம் வைத்து ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சரத்குமார், ராதிகா வாங்கிய கடனுக்கு அளித்த செக் மற்றும் அடமானம் வைத்த சொத்துக்கள் முறையாக இல்லை என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எம்எல்ஏ., எம்பி.,க்கள் வழக்குகளை விசாரணை செய்யும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் 'ரேடியன்ஸ்' நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள், நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தங்களுடைய சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா அவசரமாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.