யாழ். மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5,000 ரூபாவும், வெற்றிலை துப்பினால் 2,000 ரூபாவும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ளுவதற்காக மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாக விஸ்வலிங்கம் மணிவண்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையில் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாநகரத்தினை தூய்மையான நகரமான பேணுவதற்காக மாநகரசபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து நாளையிலிருந்து கடமை புரிவார்கள்.
மாநகரத்தினை தூய்மையாக பேணுவதற்காக பொது இடங்களில் குப்பை கொட்டுவோர், வெற்றிலை துப்புவோர், வாகனங்களை பொது இடங்களில் நிறுத்துவோர், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை தடுப்பதற்கும், குற்றமிழைப்போருக்கு தண்டப்பணம் விதிப்பதற்கு யாழ். மாநகர ஊழியர்கள் ஐவர் தனியான சீருடை அணிந்து நாளையிலிருந்து கடமையில் ஈடுபடுவார்கள்.
பொது இடங்களில் குப்பை கொட்டுவதற்கு 5 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் வெற்றிலை துப்புவோருக்கு 2 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதோடு குறிப்பாக யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலும் அந்த காவலர்கள் தமது பணியினைச் செயற்படுத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.