வௌவாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கொரொனா தொற்று பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் இணைந்து தயாரித்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு இறுதிப் பகுதியில் சீனாவில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரொனா தொற்று பரவியுள்ளது.
இதுவரையில் 13 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 28 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று எப்படி மனிதர்களுக்கு பரவியது என்பது தொடர்பில் ஆராய உலக சுகாதார நிறுவன நியமித்திருந்த குழு சீனாவிற்கு விஜயம் செய்து அங்குள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வில் ஈடுபட்டனர்.
இது குறித்த அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியாகாத நிலையில், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
கொரொனா பரவியதற்கு 4 சூழ்நிலைகளை சொல்லலாம்.
முதலாவது, வௌவாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவி இருக்கலாம். இதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
இரண்டாவது, வௌவாலிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவி இருக்கலாம். இதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மூன்றாவது, குளிரூட்டப்பட்ட உணவு பொருட்கள் வழியாக பரவி இருக்க சாத்தியம் உள்ளது. ஆனால், அப்படி நடந்திருக்காது.
நான்காவது, பரிசோதனை கூடத்தில் இருந்து கசியும் சூழ்நிலை. ஆனால், அதற்கு சிறிதுகூட சாத்தியம் இல்லை. கொரோனாவை உண்டாக்கும் வைரஸ் போன்ற ஒரு வைரஸ், வௌவாலிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோன்ற வைரஸ்கள், எறும்புத்தின்னி, கீரி, பூனைகள் ஆகியவற்றிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் கூறியுள்ளது.