ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிற்கும் கேரளாவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து கேரள பொலிஸாரும் இந்திய புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கேரளாவுடன் ரிஷாட் பதியுதீனுக்குள்ள தொடர்புகள் குறித்த குறிப்பிடத்தக்க விபரங்கள் எவையும் இன்னமும் கிடைக்காத போதிலும் 2009 இல் அவர் கேரளாவிற்கு ஏன் விஜயம் மேற்கொண்டார் என்பது குறித்தும் கேரளாவின் மதத் தலைவர்கள் சிலருடன் அவருக்குள்ள தொடர்புகள் குறித்து விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
கேரளாவின் மததலைவர்கள் சிலர் இலங்கையில் ரிசாத்பதியுதீனை சந்தித்துள்ளதுடன் 2013 இல் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டவேளை அவர் குறிப்பிட்ட மததலைவர்களை சந்தித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீனின் தந்தை கசரகோட் - பத்நா என்ற பகுதியை பூர்வீகமாக கொண்டவர் என தெரிவித்துள்ள புலனாய்வு அதிகாரிகள் அவர் அந்த பகுதியில் உள்ள சிலருடன் தொடர்பிலிருந்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வு பணியகமும் தேசிய விசாரணை முகவர் அமைப்பும் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு இது தொடர்பான விசாரணைகளில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன.
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட ஸஹ்ரான் ஹாசிமுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பை பேணிய தமிழ் நாட்டை சேர்ந்த ஐ.எஸ் ஆதரவாளர் ஒருவரை 2019 ஜூன் மாதம் தேசிய புலனாய்வு முகவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இலங்கையின் அரசியல்வாதிக்கும் கேரளாவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து வெளியான தகவல்களை உறுதி செய்வதற்காக கேரள பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என மாநிலத்தின் தலைமை பொலிஸ் அதிகாரி லோக்னாத் பெகேரா தெரிவித்துள்ளார்.
கேரளாவின் பத்நா என்ற பகுதியிலிருந்து 2016 இல் ஐ.எஸ் அமைப்புடன் இணைவதற்காக சிரியா சென்ற ஐந்து பேர் குறித்த விசாரணைகளின் போது அவர்களில் சிலர் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத்திடம் சென்றுள்ளமையும் அவர்கள் அங்கு மதப் பயிற்சி பெற்ற பின்னர் சிரியாவிற்கு சென்றுள்ளமையும் தெரியவந்தது என தெரிவித்துள்ள அதிகாரிகள் ரிஷாட் பதியுதீனிற்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆழமான விசாரணை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.