கொழும்பு துறைமுக நகரத்தை இலங்கையின் சட்ட கட்டமைப்புக்குள் உட்படுத்தப்படாவிட்டால் நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று தேசிய புத்திஜீவிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு - மருதானையில் அமைந்துள்ள சனசமூக கேந்திர நிலையில் இன்று (21) தேசிய புத்திஜீவிகள் அமைப்பினரினால் விசேட ஊடகச்சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அமைப்பின் பொருளாதார அபிவிருத்தி பிரிவின் தலைவர் அனில் ஜயந்த, உறுப்பினர்களான காணி அமைச்சின் முன்னாள் செயலாளர் அசோக் பீரிஸ் மற்றும் சட்டதரணி நிமலா சிறிவர்தன ஆகியோர் அதனை சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதன்போது உரையாற்றிய அமைப்பின் பொருளாதார அபிவிருத்தி பிரிவின் தலைவர் அனில் ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்திருந்ததுடன் , அவர் மேலும் கூறியதாவது,
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில், நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பக்கமிருந்து பார்ப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பில் ஆழ்ந்து கவனம் செலுத்த வேண்டும். துறைமுக நகரத்தை அமைத்தமை தொடர்பில் சீன நிறுவனத்திற்கு பங்குள்ளதைப் போன்று இலங்கை அரசாங்கத்திற்கும் அதில் பங்குள்ளது. இந்நிலையில் கொழும்பு துறைமுக நகரப்பகுதியை கொழும்பு மாநகரசபைக்குள் உட்படுத்தப்பட வேண்டும்.
இதேவேளை, அங்கு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் சட்டவிதிகளுக்கும், அரசியலமைப்புக்கும் முரண்படாத வகையில் அமைய வேண்டும்.
இந்நிலையில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவானது, இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களை விட வித்தியாசமானதாகும்.
இந்த ஆணைக்குழுவின் ஆயுட்கால வரையரை இல்லை. அதன் அதிகாரம் ஏனைய ஆணைக்குழுவை விடவும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது. அதற்கமைய வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்துக் கொள்ளல், கொழும்பு துறைமுக நகரத்திலுள்ள நிறுவனங்களுக்கான அடிப்படைய வசதிகளை செய்துக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளையே ஆணைக்குழு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சீனாவுக்கு பொறுப்பளிக்கப்பட்டால், சீனா தனக்கு விருப்பமான பொருளாதார கொள்கையை செயற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது.
இதனால் கறுப்புபண சுத்திகரிப்பு தளமாக கொழும்பு துறைமுகம் மாற்றப்படுவதை தவிர்க்க முடியாது. இதன் காரணமாக ஊழல், மோசடிகள் இடம்பெறவும் வாய்ப்புள்ளது.
அதனால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி ஏற்படும். ஆனால் இலங்கை நிறுவனங்களுடன் இணைந்து சீன நிறுவனங்கள் செயற்பட்டால் இது போன்ற சிக்கல்கள் ஏற்படாது. அதனால் இது தொடர்பில் அக்கறையின்றி இருக்க வேண்டாம்.
அரசாங்கம் கொழும்பு துறைமுகை பொருளாதார சட்டமூலத்தை அபிவிருத்தி திட்டம் என்று பொது மக்களுக்கு காண்பித்துக் கொண்டு, ஒரு தரப்பினருக்கு இலாபத்தை பெற்றுக் கொடுக்க முயற்சித்து வருகின்றது.
அதனால் மக்கள் இந்த விவகாரம் தொடர்பில் மேலும் கவனம் செலுத்த வேண்டும். நாட்டு மக்களை ஏமாற்றி அரசாங்கம் செய்யப்போகும் இந்த காரியத்தினால் நாட்டுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். அப்போதே இந்த சட்டமூலத்திற்கு எதிரான பாரியதொரு எதிர்ப்பு நடவடிக்கையை எம்மால் முன்னெடுக்க முடியும் என்றார்.
-செ.தேன்மொழி