மேற்குலக நாடுகளுக்கு அடிபணிந்து செயற்படாமையின் காரணமாகவே ஜெனிவாவில் இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே தான் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள போலியானதும், அடிப்படையற்றதுமான குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்டக்கப்பட்ட கேள்விகளுக்கு பதலளிக்கும் போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,
கேள்வி: பொலிஸ் உத்தியோக்கத்தரொருவர் பிரதான வீதியில் சாரதியொருவரை மோசமாக தாக்கியுள்ளார். ஜெனிவாவில் இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றமைக்கு இது போன்ற செயற்பாடுகள் அல்லவா காரணம்?
பதில்: குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெறுமனவே வசனங்களில் அல்லாமல் செயலில் நிரூபித்துள்ளோம்.
அதற்கமைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு , அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.
அண்மையில் அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியொருவர் கறுப்பின பிரஜையொருவரை தனது கால்களால் கழுத்தை நெறித்து அவர் உயிரிழக்க காரணமானார்.
உலகலாவிய ரீதியில் பொலிஸ் அதிகாரிகளால் பொதுமக்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது அரசாங்கத்தின் தவறல்ல என்ற போதிலும், இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருந்தால் அதுவே அரசாங்கத்தின் தவறாகும்.
எனவே ஜெனிவா பிரேரணை இந்த காரணிகளுக்காக சமர்ப்பிக்கப்படவில்லை.
மேற்குலக நாடுகளுக்கு அடிபணிந்து எமது அரசாங்கம் செயற்படாமையின் காரணமாகவே இலங்கைக்கு எதிராக போலியானதும் , அடிப்படையற்றதுமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த குற்றச்சாட்டுக்களை நாம் உத்தியோகபூர்வமான நிராகரித்துள்ளோம்.
எனவே இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் எந்தவொரு காரணியையும் நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார்.