அம்பாறை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 43 வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களால் ஒரு இலட்சத்தி 63 ஆயிரத்தி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி இன்று (06) தெரிவித்தார்.
அக்கரைப்பற்று, பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை, அம்பாறை ஆகிய நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், கூறினார்.
கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதல் விலைக்கு அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டதாக, அவர் தெரிவித்தார்.
வர்த்தக நிலையங்களில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பொருட்களை காட்சிப்படுத்தியமை, காலாவதியான பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்து நுகர்வோரை ஏமாற்றியமை, மின் உபகரணங்களுக்கான கட்டுறுதிக் காலத்தை வழங்காமை உள்ளிட்ட போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கெதிராகவே நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததாகவும் கூறினார்.