லண்டனில் Tower Bridge இல் இருந்து தேம்ஸ் நதியில் குதித்த 13 வயது சிறுவனை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
லண்டனில் 13 வயதேயான மாணவன் ஒருவன், பாடசாலைக்கு செல்லும் வழியில் Tower Bridge-ல் இருந்து குதித்துள்ளான்.
குதிக்கும் போது பயத்தில் சிறுவன் அலற, அப்போது அந்த பாலம் வழியாக தமது காதலருடன் நடந்து சென்ற பெண் ஒருவர், சிறுவனை காப்பாற்றும் நோக்கில் சட்டென்று பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரால் சிறுவனின் பை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. செவ்வாய்க்கிழமை பகல் சுமார் 8 மணியளவில் நடந்த இந்த பகீர் சம்பவம் லண்டனை உலுக்கியுள்ளது.
இதனையடுத்து லண்டன நகர பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஹெலிகொப்டர் மற்றும் பயிற்சி பெற்ற வீரர்கள் இந்த நடவடிக்கையில் களமிறக்கப்பட்டுள்ளனர். Tower Bridge இல் இருந்து குதிக்கும் போது சிறுவன் அலறிய சத்தம் கேட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் குறித்த சிறுவன் தமது 13வது பிறந்தநாளை போன வாரத்திலேயே கொண்டாடியுள்ளான். சம்பவத்தன்று பாடசாலைக்கு செல்வதாக முழு சீருடையில் Tower Bridge வழியாக நடந்து சென்ற சிறுவன், பின்னர் சட்டென்று தேம்ஸ் நதியில் குதித்துள்ளான்.
சிறுவன் தொடர்பில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இந்த வழக்கை மாயமானவர்கள் பட்டியலில் இணைத்து விசாரிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை அணுக வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.