45 வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக வெளிநாடுகளில் உள்ள 10 பேரை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவுஸ்இரேலியா, துபாய், மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள 10 பேரை அழைத்து வரவே இவ்வாறு மேலதிக விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது.
குறித்த 10 பேரும் இலங்கையில் பல்வேறு அடிப்படைவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கும் விசாரணையாளர்களுக்கும் தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே, ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதலுடன் அவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க இவ்வாறு அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
ஏற்கனவே ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த 10 பேர் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் மொத்தமாக 270 க்கும் அதிகமான சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 200 இற்கும் அதிகமானோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, மற்றும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.