ஸஹ்ரானுடன் நெருங்கிப் பழகிய அமைச்சர்கள் சிலர், பொது வெளியில் சுதந்திரமாக செயற்பட்டு வருவதாக பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றஞ்சாட்டுகின்றார்.
ஈஸ்டர் ஞாயிறு தினத்தையொட்டி, கொட்டாஞ்சேனை கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று (04) இடம்பெற்ற ஆராதனைகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த விடயங்களை பரிசீலிப்பதற்கு மேலும் குழுக்களை நியமிக்கத் தேவையில்லை. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனை தற்போது நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இந்த அழிவை தடுப்பதற்கு தமது கடமையையும், பொறுப்பையும் தவறிய தலைவர்களின் பெயர்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் இது குறித்து வினவ விரும்புகின்றேன். இதனுடன் தொடர்புடைய மற்றும் தொடர்புகளை வைத்திருந்த சில அமைச்சர்கள் சுதந்திரமாக செயற்படுகின்றார்கள். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் கிடைத்தமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய வேண்டும்.
ஸஹ்ரானுடன் சிரித்துப் பழகிய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது எமது மக்களுக்கு செய்கின்ற அவமதிப்பாகும். இதனால் இதற்கான நியாயத்தையும், நீதியையும் நான் இன்னும் கோரிக் கொண்டிருக்கின்றேன்.
எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் இவை நடைமுறைப்படுத்தவிடவில்லை என்றால் நாம் வீதிக்கு இறங்குவோம் என்றார்.