டாம் வீதியில் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்று நீண்டநேரமாக காணப்பட்டதையடுத்து, நேற்று (01) பிற்பகல் 2.30 மணியளவில் டாம் வீதி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதித்த பொலிசார், சூட்கேஸிற்குள் கருப்பு நிற பொலித்தீனில் சுற்றப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதை அவதானித்தனர்.
சூட்கேஸிற்குள் சடலத்தின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது.
அந்த பகுதியிலுள்ள CCTV கமரா காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் நடத்திய விசாரணையில், சடலத்தை கொண்டு வந்து வைத்தவரையும், சூட்கேஸ் கொண்டுவரப்பட்ட பயணிகள் பேருந்தையும் அடையாளம் கண்டனர்.
இதன்படி, பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் அடையாளம் காணப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யுவதியை ஹன்வெல்ல பகுதியில் கொலை செய்து, சூட்கேஸிற்குள் அடைத்து, பயணிகள் பேருந்தில் கொண்டு வந்து, வீதியோரம் இறக்கி வைத்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த 3 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.