சுயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டுள்ள கப்பல் மீட்டெடுக்கும் நடவடிக்கைக்காக எகிப்திற்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய விநியோகச் செயற்பாடுகள் அங்கு கப்பல் தொடர்ந்தும் தரித்து நிற்பதால் மேலும் ஒரு சிக்கலை உருவாக்குகிறது.
எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நிற்கும் மிகப்பெரிய சரக்கு கப்பலை மீண்டும் மிதக்க வைக்க, சனிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
எனினும் இந்த முயற்சிகளில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள சூயஸ் கால்வாய் அதிகாரிகள், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தக் கப்பலை மீண்டும் மிதக்க வைப்பதற்கான வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர்.
சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகன் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் சூயஸ் கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்குக் கப்பல் தரைதட்டி நிற்கிறது.
எவர் கிவன் கப்பலின் இரண்டு பக்கங்களிலும் 350க்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருக்கின்றன. இதனால் உலகளவில் சரக்குப் போக்குவரத்து கணிசமாகத் தடைபட்டுள்ளது.