புகலிடம் கோரி பிரித்தானியாவிற்குள் வருபவர்கள், அவர்கள் எவ்வாறு பிரித்தானியாவிற்குள் நுழைகின்றார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் புகலிட கோரிக்கை மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் உள்துறை செயலாளர் பிரிதி படேல் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
பிரித்தானியாவிற்கு நுழைய முயற்சிக்கும் மக்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் கும்பல் சுரண்டுகின்றன.
அந்த கும்பல்களை சேர்ந்தவர்களே பிரித்தானியாவில் ஆயுதங்களை வைத்திருப்பதுடன் கடுமையான குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால், பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக வரும் குடும்பங்கள் மற்றும் சிறு குழந்தைகள் கடலில், லாரிகளில் மற்றும் கப்பல் கொள்கலன்களில் தங்கள் வாழ்க்கையை இழந்துவிடுகின்றனர்.
இந்த மரணங்களைத் தடுப்பதற்கான வழி ஆட்கடத்தல் வர்த்தகத்தை நிறுத்துவதாகும். புதிய திட்டங்கள் சிறந்ததாக இருக்கும். அத்துடன், குற்றவியல் கும்பல்களின் செயற்பாடுகளை புதிய திட்டங்கள் கட்டுப்படுத்தும்.
புதிய திட்டங்களின் கீழ், புகலிடம் கோருவதற்காக சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழையும் நபர்களுக்கு உரிமைகள் இனி இருக்காது.
புதிய நடவடிக்கைகள் மக்களுக்கு மீள்குடியேற்ற வாய்ப்பளிக்கும் வகையில் பாதுகாப்பான மற்றும் சட்ட வழிகளை உருவாக்கும்.
போலியான வாக்குமூலங்கள் மற்றும் நாட்டில் இருக்கக் கூடாத நபர்களை அகற்றுவதில் சட்டரீதியான அணுகுமுறைகள் அடைக்கப்பட்டுள்ளன.
புதிய முறை துன்புறுத்தல்களில் இருந்து தப்பி ஓடும் மக்களுக்கு உலகின் பயங்கரமான பகுதிகளில் மோசமான முகாம்களில் சிக்கித் தவிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் போன்றவர்களுக்கு புகலிடம் அளிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மார்ச் 2020 உடன் முடிவடைந்த ஆண்டில் பிரித்தானியாவில் 35,099 புகலிட கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றிருந்தன.
ஈரான், அல்பேனியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து அதிக புகலிட கோரிக்கைகள் கிடைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஆட்கடத்தல்காரர்களின் உதவியுடன் 8,000க்கும் மேற்பட்ட மக்கள் சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.