வெல்லவாய - எல்ல வீதியில் ஹுணுகெட்டிய சந்தியில் இன்று (25) மதியம் ஏற்பட்ட வாகன விபத்தில் முன்பள்ளி மாணவியான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
பரகஹஅராவ எனும் பகுதியைச் சேர்ந்த 05 வயது சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான சிறுமி வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார்.
முன்பள்ளி நிறைவடைந்த பின்னர் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் சிற்றூர்ந்தில், வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென அதன் கதவு திறக்கப்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
மேற்படி சம்பவத்தின் பின்னர் குறித்த சிற்றூர்தியை செலுத்திய சாரதி வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேகநபர் நாளை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.