கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுக்களின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் மறுசீரமைப்புகளை ஏற்படுத்த விளையாட்டுத்துறை அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமாஅதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கட்டின் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக அதன் சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்குமாறு வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது.
இதன்போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விளையாட்டு துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புகள் குறித்து ஆராய்வதற்காக தேசிய விளையாட்டு ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினார்.
மேலும், குறித்த ரிட் மனுவுக்கு எதிரான காரணிகளை எதிர்வரும் ஜுன் 8 ஆம் திகதிக்கு முன்னதாக முன்வைக்குமாறு பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் காலவகாசம் வழங்கப்பட்டது,
அத்துடன், எதிர்வரும் ஜுன் 8 ஆம் திகதி மீளவும் குறித்த ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனவும் மேன்றுறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜுன் ஒபேசேகர மற்றும் மாயாதுன்ன கொரயா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.