மாத்தளை ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் தெரு நாய்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
பாடசாலை இடைவேளை நேரத்தின் போது, மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த முதலாம் தர மாணவனை அங்கிருந்த தெரு நாய்கள் கூட்டம் கடித்துள்ளன.
மாணவன் தாக்கப்பட்டு சற்றுநேரம் கழித்து அவதானித்த அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் மாணவனை தெருநாய்களுடனான கடும் போராட்டத்தின் பின்னர் மீட்டனர். மாணவனை மீட்கும் போது நடத்தப்பட்ட தாக்குதலில் நாய்களில் ஒன்று கொல்லப்பட்டது.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக மாத்தளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மாணவனின் உடல் முழுவதும் பல கடிக்காயங்கள் இருந்ததாக
மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பாடசாலை அதிபர் தெரிவிக்கையில், இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் பாடசாலை வளாகத்தில் இதுபோன்ற தெரு நாய்கள் தொல்லை இருந்ததாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் இது தொடர்பாக அந்த நிறுவனங்கள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிபர் தெரிவித்தார்.