உலக சுகாதார நிறுவனம் மற்றும் தொற்று நோய் நிபுணர்களின் வழிகாட்டல்களுக்கமைய இலங்கை அரசாங்கம் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதித்திருப்பதை நாம் வரவேற்கிறோம்.
தகனம் மட்டும் எனும் கொள்கையானது பல குடும்பங்கள் தங்கள் மத மற்றும் கலாச்சார நம்பிக்கைகளுக்கு ஏற்ப தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதிலிருந்து அவர்களை தடுத்ததுடன் அக்குடும்பங்களின் உரிமைகளை மீறி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இக்கொள்கையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமானது, வைத்தியசாலைகளில் மரணித்தால் தகனம் செய்யப்படுவோம் என்ற அச்சத்தினால் மருத்துவ சிகிச்சைகளைப் பெற மறுத்த ஆயிரக்கணக்கான முதியவர்கள், நோயாளிகளுக்கும் நிம்மதியை அளித்துள்ளது.
$ads={1}
கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்தமைக்காக அரசாங்கத்தை பாராட்டுகின்ற அதேவேளை, கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் அடக்கஸ்தலத்தை ஏற்பாடு செய்யுமாறு முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை விடுக்கிறது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை முஸ்லிம் சமூகம் பின்பற்றி ஒழுகும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
இம் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கிடையேயான நல்லுறவை சீர்குலைத்திருக்கக்கூடிய மன்னார் வளைகுடாவில் உள்ள இரணைதீவில் மாத்திரம் அடக்கம் செய்ய வேண்டும் எனும் தீர்மானத்தை கட்டாயப்படுத்தாமைக்காக நாம் அரசாங்கத்திற்கு நன்றி கூறுகிறோம்.
என்.எம். அமீன்
தலைவர்
முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா