கடந்த 6 ஆம் திகதி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
குறித்த பெண்ணின் விசா காலாவதியானதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் முதல் அவர் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி உயிரிழந்த பெண் இலங்கையின் கம்பஹா பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 2017 ஆம் ஆண்டில் மாணவர் விசாவில் ஜப்பானுக்கு சென்றுள்ளார்.
எனினும், ஜப்பானிய குடிவரவு அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது விசா காலாவதியுடன் அவரை தடுத்து வைத்திருந்தனர். பின்னர் அவர் நாகோயா தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டார்.
குறித்த பெண் தனக்கு தடுப்பு மையத்தில் வழங்கப்பட்ட உணவு குறித்து தொடர்ந்து முறைப்பாடு செய்ததாகவும், அதன் காரணமாக அவர் பலவீனமாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் இறப்பதற்கு முன்பு "எனக்கு மிகவும் பசி எடுக்கிறது, சாப்பிட்டே ஆக வேண்டும்" என கூறியதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஆறு சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் அந்தப் பெண்ணை பரிசோதித்ததாகவும், குறைந்தபட்சம் அவர் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு அதிகாரி தெரிவித்ததாக தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மரணத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை" எனவும், இது குறித்த அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம், இந்த விடயம் குறித்து நாங்கள் ஏற்கனவே ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்திற்கு அறிவித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இந்த விவகாரம் குறித்து தனித்தனி பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு ஜப்பானிய நீதி அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்”என்று செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.