ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை தண்டனை சட்டக் கோவை, பயங்கரவாத தடை சட்டம் மற்றும் ICCPR எனப்படும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ், குற்றவியல் சட்டக்கோவை விதிமுறைகள் பிரகாரம் நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள டி லிவேரா பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
கடந்த 2019 ஈஸ்டர் ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில், சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற சம்பவத்தில் தற்கொலைதாரியாக செயற்பட்ட மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் என்பவருடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறி சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-எம்.எப்.எம்.பஸீர்