வாடகைக்கு வழங்கிய கட்டடத்தை மீளக் கேட்டமையால் ஏற்பட்ட முரண்பாட்டில் குறித்த கட்டட உரிமையாளரைக் கடத்தி கடத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளாகவும் சந்தேக நபர்களில் ஒருவர் யுவதி எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இம்மாதம் 08 ஆம் திகதி சீதுவ பொலிஸ் பிரிவில் ரத்தொலுவ – முத்துவாடிய பிரதேசத்தில் 26 வயதுடைய நபர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோதே குறித்த நபர் கடத்தப்பட்டுள்ளார். இவர் மக்கொன பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதோடு, கடத்தப்பட்டு இரு தினங்களின் பின்னர் அவரது சடலம் நிக்கவரெட்டிய – கொட்டவேற பொலிஸ் பிரிவில் கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பான விசேட விசாரணைகள் சீதுவ மற்றும் கொட்டவேற பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டன. நீண்ட விசாரணையின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட த 26 வயதுடைய நபர் எராந்த பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவருக்கு மாத்தறை அநகாரிக தர்மபால மாவத்தையில் கட்டடமொன்று காணப்படுவதாகவும் இந்தக் கட்டடத்தை வாடகைக்கு பெற்றுக் கொண்டிருந்த நபரால் திட்டமிட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவ ந்துள்ளது. வாடகைக்கு வழங்கியிருந்த கட்டடத்தை மீள பெற்றுக் கொள்ள முயற்சித்தபோது ஏற்பட்ட முரண்பாடுகளே கொலைக்கான காரணம் என தெரிய வந்துள்ளது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய ஐவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் யுவதி ஒருவரும் உள்ளடங்குகிறார். இவர் மாத்தறை – ஹக்மனை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவராவார். குறித்த யுவதி பேஸ்புக் ஊடாக குறித்த ( கொல்லப்பட்ட) நபருடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்காக சீதுவ பிரதேசத்துக்கு வருமாறு அவரை அழைத்துள்ளார்.
அதற்கமையவே குறித்த நபர் வேன் ஒன்றில் அந்தப் பிரதேசத்துக்கு வந்துள்ளார். இதன்போதே அவர் கடத்தப்பட்டு, நிக்கவரெட்டிய – கொட்டவேற பிரதேசத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்னறன. சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
-எம்.மனோசித்ரா