சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 09ஆம் திகதி தனியார் விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பொலிஸார், சித்ராவின் காதல் கணவர் ஹேமந்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் இறந்த சித்ராவின் தாயார், தனது மகள் சித்ராவை ஹேமந்த்தான் கொலை செய்தார் என்று பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணை முடிந்து ஹேமந்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சித்ராவை, டிவி சீரியலில் நடிக்க கூடாது என்றும், அவர் மீது சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுந்த ஹேமந்த் தனக்கும் சித்ராவுக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறி இந்த வழக்கில் தனக்கு பிணை அளிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில், சித்ராவின் மரண வழக்கை விசாரித்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ, தனது விசாரணை அறிக்கையை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொலிஸாரிடம் ஒப்படைத்தார். இந்த அறிக்கை தொடர்பாக எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய நிபுணர் குழு நடிகை சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.
இது தொடர்பான இன்று நடைபெற்ற விசாரணையில், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டபின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும், சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக மறு விசாரணை வரும் பிப்ரவரி 05ஆம் திகதி என்றும், வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை பிப்ரவரி 04ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.