அதிகரித்து செல்லும் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் முதல் குறைந்த விலையில் சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்களின் ஊடாக பொருட்களை நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் இன்று (03) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கபட்டுள்ளது.
இதற்கமைய, பருப்பு, சீனி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட 28 வகையான பொருட்களை இவ்வாறு குறைந்த விலைகளில் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 03 மாதங்களுக்கு இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடி இறக்குமதியாளர்களுடன் எதிர்கால விலை தொடர்பில் உடன்பாடொன்று ஏற்ப்பட்டுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இதுவரை மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகள் அற்ற வீடுகளுக்கு எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக அவற்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த யோசனைக்கு அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.