முகத்துவாரம் மாதம்பிட்டி – ரன்தியவுயன தொடர்மாடி குடியிருப்பில் ஆறாம் மாடியிலிருந்து வீழ்ந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு மாதம்பிட்டி – ரன்தியவுயன தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் ஆறாம் மாடியில் வசித்து வந்த யுவதி இன்று (03) அதிகாலை 3 மணியளவில் இவ்வாறு வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
ரன்தியவுயன தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த 27 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீதிவான் விசாரணைகளையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.