நாட்டின் தென்கிழக்கு கடற்பகுதியில் மேக மூட்டத்துடனான நிலை காணப்படுவதன் காரணமாக மழையுடனான வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையிலான கடற்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சில இடங்களில் கனமழை பெய்யும் என்பதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது, மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்துக் காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறித்த கடல் பகுதிகளில் கொந்தளிப்பாக காணப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கடல் பகுதிகளில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும் இடைக்கிடை 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு மலைச்சரிவுகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோ மீற்றர் வரையில் அதிகரித்து வீசுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் 50 மில்லி மீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யுமெனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு, இடியுடன் கூடியமழை மற்றும் அதிக காற்று வீசும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.