2020 ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விரிவுரைகள் மற்றும் பகுதி நேர வகுப்புகள் ஆகியவற்றை நடாத்துவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவிலிருந்து (23) குறித்த தடை நடைமுறைப்படுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை 2020 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய, பொதுப் பரீட்சைகள் சட்ட விதிமுறைகளின்படி குறித்த தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சை தொடர்பிலான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகிக்கவும் குறித்த காலப்பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சை வினாப்பத்திரங்களுக்கு விடையளிக்குமாறு அல்லது அதனை ஒட்டிய வகையில், போஸ்டர், பேனர் மற்றும் கையேடுகள் ஆகியவற்றை இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகம் மூலமாக பிரசுரிக்கவும் பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.
அத்துடன், இந்த நடைமுறைகளை மீறி செயற்படும் நபர்கள் பொதுப்பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில், அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.