மனித உரிமை விடயங்களில், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் மேற்கத்தைய நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக சதித்திட்டங்களை மேற்கொள்வதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச ஊழியர்களை உயர் பதவிகளில் இருந்து நீக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் பரிந்துரைத்திருந்தார்.
அத்துடன், பொறுப்புக்கூறலை பலப்படுத்தி உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு விடயத்தில் மறுசீரமைப்புகளை அமுல்படுத்துமாறும் மிச்செல் பெச்சலட் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.
மேலும், சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்றாற் போன்ற புதிய சட்டம் மாற்றீடு செய்யப்படும் வரை கைது நடவடிக்கைகளில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த தடை விதிக்குமாறும் அவர் பரிந்துரைத்திருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், இது போன்ற பல்வேறு பரிந்துரைகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பின்னணியிலேயே, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்திருந்தார்.