வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் நேற்றுமுன்தினம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்து கிராம மக்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த சிறுவன் கடந்த 09 ஆம் திகதி மதியம் 2.00 மணியளவில் வீட்டில் இருந்து மேலதிக வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்துவிட்டு அயல்வீட்டுக்கு விளையாட சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து அவரைக் காணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மறுநாள் காலை அயல்வீட்டு கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த சிறுவனின் புத்தகப்பை கிணற்றிற்கு அண்மையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மரணமடைந்த சிறுவனுடன் விளையாடிய அயல்வீட்டு சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முரணான தகவல்களை அவர் தெரிவித்திருந்தார்.
முகமூடி அணிந்த ஒருவர் மோட்டார் சைக்களில் வந்து சிறுவனை தூக்கிச் சென்றதாக முன்னர் தெரிவித்ததுடன், விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கிணற்றில் விழுந்ததாகவும் பின்னர் தெரிவித்திருந்தார்,
இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அந்த நபரை கைதுசெய்து ஓமந்தை பொலிசார் நீதிமன்றில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதேவேளை உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் நவ்வி பகுதியில் அமைந்துள்ள அவனது வீட்டில் இன்று காலை இடம்பெற்று சடலம் சமளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது கிராமத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் வீதியில் சடலத்தினையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதன் உண்மைத்தன்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்த சிறுவனுக்கு நடந்தது மரணமா கொலையா, நீதித்துறை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காதது ஏன், இப்படி ஒரு குடும்பம் இந்த ஊருக்கு தேவையில்லை என்ற பதாதைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூலம் - வீரகேசரி