சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, எதிர்வரும் 24 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு, சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபொல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் நேற்று (16) கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்தாரி ஒருவருடன் தொடர்பினை வைத்திருந்ததாக கூறி, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டு சுமார் 10 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தன்னை விடுதலை செய்யும் வகையில், பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தித்திற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், குறித்த மனு தொடர்பில் வாதங்களை முன்வைக்க முன்னர் அது தொடர்பில் ஆராய வேண்டும் என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே மன்றுக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பில் ஆராய தமக்கு காலகெடு வழங்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய, குறித்த ரிட் மனுவை எதிர்வரும் 24 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த ரிட் மனுவின் பிரதிவாதிகளாக, பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.