நாட்டில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டு அந்நிய செலாவணி பிரச்சினை காரணமாக இலங்கையின் ரூபாயானது டொலருடன் ஒப்பிடும் போது பாரியளவில் வீழ்ச்சியடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை இறக்குமதி செய்த எரிபொருளுக்கான கட்டணம் கடந்த 11 மாதங்களாக செலுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சம்பிக்க ரணவக்க தனது முகப்புத்தக பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளர்.
அந்த பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்பு மிக மோசமான முறையில் குறைந்துள்ளது.
அனைத்து வங்கிகளிலும் டொலர்களில் வழங்கும் காப்பீட்டு பத்திரங்களில் 10 வீதத்தை மத்திய வங்கிக்கு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை மத்திய வங்கியிடம் மிகவும் குறைவான டொலர் கையிருப்பே உள்ளது.
இந்தியா வழங்கிய 400 மில்லியன் டொலர்களை திரும்ப செலுத்துமாறு பலவந்தப்படுத்தியன் மூலம் இலங்கை வங்கிகளிடம் இருந்த டொலர்கள் மூலம் அது செலுத்தப்பட்டது.
இதன் காரணமாக எமது ஆட்சிக்காலத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி சேமித்த 7.2 பில்லியன் டொலர்கள் 5 பில்லியன் வரை குறைந்துள்ளதாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு இலங்கை முழுமையாக 6.9 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டும். இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய 400 மில்லியன் டொலர்களுடன் இந்த தொகையானது 7.3 பில்லியன்.
எனினும் நாட்டில் 4 பில்லியன் டொலர்களே கையிருப்பில் உள்ளது. இதன் காரணமாக இலங்கை தொடர்ந்தும் அந்நிய செலாவணி பிரச்சினையை எதிர்நோக்கும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.