கம்பளை பிரதேசத்தில் சில்லறை வியாபாரிகளுக்கு நீண்ட காலமாக ஹெரோயின் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் நபரொருவரை சந்தேகத்தின் பேரில் இன்று (25) அதிகாலை கம்பளை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவரிடமிருந்து 50 கிராம் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
கம்பளை - கம்பளவெவ பள்ளிவாசலுக்கு அருகில் வசித்து வரும் 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கசுன் ஹெட்டியாராச்சிக்கு கிடைக்கப்பெற்ற இரகயத் தகவல் ஒன்றையடுத்து, கம்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் விக்ரமரத்னவின் ஆலோசனையின் பேரில் இன்று அதிகாலை கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள வீதியில் வைத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளிலிருந்து சந்தேக நபர் கொழும்பு கொட்டாவை பகுதியிலிருந்தே கம்பளை பிரதேசத்துக்கு ஹெரோயின் கடத்தி வருவதாகவும், அதனை கடத்துவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உள்ளாடைகளை அணிந்து அவற்றுக்குள் மறைத்து சூட்சுமமாக கடத்துவதும் தெரிய வந்துள்ளது.
$ads={1}
இந்நிலையில், சுமார் 6 லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினை சுமார் 15 லட்சம் ரூபாவுக்கு இவர் விற்பனை செய்வதும் தெரிய வந்துள்ளது.
இவர் கண்டி, கேகாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இரு பெண்களை திருமணம் செய்துள்ளதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதன்போது கொழும்பிலிருந்து ஹெரோயின் கடத்தும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு கருதி கேகாலை மனைவி வீட்டில் ஒரு நாள் தங்குவது உட்பட பல்வேறு விடயங்களும் அம்பலமாகியுள்ளன.
சந்தேக நபர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் பிரதான பாதைகளில் உளவாளிகளை நிறுத்துவதால் சம்பவ தினத்தன்று பின் வழியால் சென்றே பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் கம்பளை மாவட்ட நீதுமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
-கம்பளை நிருபர்