வாகன மோசடிக்கு உதவ போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கடுவெல பகுதியில் 26 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வாகன திருட்டுகளில் ஈடுபட்ட கும்பல்களுக்கு அசல் உரிமத் தகடுகளைப் பெறுவதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்து கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
வாகன கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் திருடப்பட்ட வாகனங்களுக்கான அசல் உரிமத் தகடுகளை அரச அதிகாரிகளிடம் இருந்து பெறுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்ததாக தெரிவித்தனர்.
உரிமத் தகடுகளைப் பெற்ற பிறகு, திருடப்பட்ட வாகனங்களுக்கு உரிமத் தகடுகளை பொருத்தி, பின்னர் சந்தேகத்திற்கு இடமின்றி வாகனங்களை மறுவிற்பனை செய்து வந்துள்ளனர் என்றார்.
மேலும் இந்த வாகன மோசடி ஒரு குழுவினர் சம்பந்தப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் என்று ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது .
கடுவெல பகுதியை சேர்ந்த சந்தேகநபர் மேல் மாகாண தென் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டார், அதே நேரம் சந்தேக நபரிடம் இருந்து அதிகாரிகள் 40 போலி ஆவணங்களை மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் இன்று கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார், அதே நேரத்தில் வாகன மோசடி குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றார்.
நாட்டில் சமீபத்திய காலங்களில் ஏராளமான வாகன திருட்டுகள் பதிவாகியுள்ளன, இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.