இந்தியா உட்பட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் நாட்டில் நுழைய சவூதி உள்துறை அமைச்சகம் மீண்டும் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
நேற்று நள்ளிரவில் திடிரென அறிவிக்கப்பட்ட இந்த புதிய முடிவு நாட்டின் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியா, அர்ஜென்டினா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, பாகிஸ்தான், பிரேசில், போர்ச்சுகல், இங்கிலாந்து, துருக்கி, தென்னாப்பிரிக்கா, சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், லெபனான், எகிப்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நாடுகளில் உள்ள சவூதி நாட்டவர்கள், தூதரக அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இந்த தடை பொருந்தாது.
சவூதி அரேபியாவிற்குள் நுழைவதற்கு 14 நாட்கள் முன்னர் மேற்குறிப்பிட்ட நாடுகள் வழியாக கடந்து வந்த பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தத்தடை பொருந்தும்.
மேலும் இந்த நாடுகளில் இருந்து சவூதி நாட்டவர்கள், தூதரக அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றைக் கடந்து சென்றிருந்தால், சவூதி சுகாதார அமைச்சகத்தினால் நிர்ணயிக்கப்பட்டபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மட்டுமே நாட்டில் நுழைய முடியும்.
புதிய முடிவு நாளை (03) புதன்கிழமை சவூதி நேரப்படி இரவு 9.00 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் அமீரகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் துபாயினை தற்காலிக புகலிடமாக கொண்டு சவூதியில் நுழைய காத்திருக்கும் இந்திய, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை இந்த புதிய முடிவு அதிகளவில் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகம் போல் மற்ற வளைகுடா நாடுகளுக்கு விசிட் விசா மூலம் நுழைந்து தற்காலிகமாக தங்கியிருந்து சவூதியில் நுழைவது அவ்வளவு எளிதாக காரியம் இல்லை என்பதும் ஒரு சவாலான காரணமாக உள்ளது.
இந்த புதிய தற்காலிகமாக தடை உத்தரவு எத்தனை நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது உடனடியாக தெரியவில்லை.