அமைச்சர் விமல் வீரவன்ச தரப்பில் இரண்டு வௌிநாட்டு உளவாளிகள் செயற்பட்டு வருவதாக வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளருமான ரேணுக பெரேரா தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றது, அது குறித்து நாம் மிக ஆவலாக அவதானித்து வருகின்றோம், இந்த பேச்சுவாரத்தையில் இரண்டு வைத்தியர்கள் பங்கேற்றதுடன் அவர்கள் வௌிநாட்டு உளவுப்பிரிவினால் ஊதியம் பெறுபவர்கள். அதனை நாம் பொறுப்புணர்வுடன் கூறுவதுடன் எதிர்காலத்தில் அந்த நபர்களின் பெயர்களை நாம் பகிரங்கப்படுத்தவும் தயங்க மாட்டோம்.
அவரது அண்மைக்கால செயற்பாடுகளை ஆராய்ந்தன் பின்னரே இவற்றை நாம் ஊடகங்களுக்கு கூறுகின்றோம். ஒரு வைத்தியர் எப்போதும் திரைமறைவிலேயே உள்ளார். மற்றுமொரு வைத்தியர் 2015ஆம் ஆண்டு தற்போதை பிரதமருக்கு எதிரான பிரதான கூட்டணியில் இருந்தார். அவர்கள் வௌிநாட்டு உளவு நிறுவனங்களுடன் செயலாற்றுவது அரசியல் பரப்பில் அனைவரும் அறிந்த விடயமாகும்.