பொரளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான ஆய்வுக்கூட உபகரணங்களை விநியோகம் செய்துவந்த இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய தேசிய ஔடத கட்டுப்பாட்டு சபையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த இடத்தில் இருந்து காலாவதியான ஆய்வுக்கூட உபகரணங்கள் பல தேசிய ஔடத கட்டுப்பாட்டு சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆய்வுக்கூட உபகரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த உபகரணங்கள் குறித்த இடத்தில் நாடு மற்றும் விபரங்கள் போலியாக மாற்றப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கலாவதியான பொருட்கள் மீண்டும் போலி விபரங்களுடன் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சட்டவிரோத நிறுவனமானது 15 ஆண்டுகளாக செயற்பட்டுள்ளதுடன், ஆய்வுக்கூட உபகரணங்களை களஞ்சியப்படுத்துவதற்கோ அல்லது பெற்றுக்கொள்வதற்கோ அனுமதி பெற்றிருக்க வில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வு கூடங்களுக்கு இந்த நிறுவனத்தின் ஊடாக உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், சுற்றிவளைப்பின் பின்னர் குறித்த நிறுவனம் சீல் வைக்கபட்டுள்ளதுடன், தேசிய ஔடத கட்டுப்பாட்டு சபையினரால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றது.