நாட்டில் கடந்த 10 நாட்களில் 1 இலட்சத்து 61 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி நன்கொடையாக நாட்டுக்கு வழங்கப்பட்டிருந்தன.
இதற்கமைய, நேற்றைய நாளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் ஆயிரத்து 625 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 61 ஆயிரத்து 773 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட தரப்பினருக்கே தற்போது கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டு மூன்று வாரங்களில் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.