கண்டி - பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு தோற்றவிருந்த 300 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தலைமை வைத்திய அதிகாரி சமரக்கொடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த தொற்றாளர்களுட்ன தொடர்புடைய மேலும் 40 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பரீட்சைகள் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான யோசனை திட்டம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், முதற் கட்டமாக மருத்துவ பீடம் மற்றும் பல் மருத்துவ பீடங்களில் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
இதனை தொடர்ந்து ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.