கொரோனா பரவல் காரணமாக கடந்த 03 மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த உடரட்ட மெனிக்கே மற்றும் தெனுவர மெனிக்கே ஆகிய புகையிரத சேவைகள் இன்று (25) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண புகையிரத அத்தியட்சகர் ஆனந்த கருணாரத்ன தெரிவித்தார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொடி மெனிக்கே கடந்த வாரம் முதல் இயங்கி வருகின்றது. புகையிரதங்கள் சுகாதார வழிகாட்டுதல்களின்படி இயக்கப்படுகின்றன. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்குச் செல்லும் உடரட்ட மெனிக்கே மற்றும் தெனுவர மெனிக்கே ஆகிய புகையிரதங்கள் ஹட்டன் ரயில் நிலையத்துக்கு வந்த போது கொரோனா விதிமுறைகளுக்கு அமைய அதிகளவான பயணிகள் அங்கு கூடியிருந்ததாகவும் அவர் கூறினார்.
இதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து நானு ஓயா வரை ‘செங்கடகல மெனிக்கே’ எனும் பெயரில் புதிய புகையிரதம் ஒன்று நாளாந்த சேவையில் ஈடுபடவுள்ளது. இது நண்பகல் 12.40க்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு ஹட்டனை வந்தடையவுள்ளது.
மேலும் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்குச் செல்லும் இரவு தபால் ரயிலும் இன்று முதல் சேவையை ஆரம்பிப்பதாக மத்திய மாகாண புகையிரத அத்தியட்சகர் கூறினார்.