கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களை சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேற்றும் நடைமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி புதிய திருத்தங்களுடனான புதிய சுற்றுநிருபம் உரிய தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார கட்டமைப்பின் தற்போதைய திறன், ஆய்வுகூடங்களின் கண்டறிவதற்கான வளங்கள் மற்றும் தொற்று நோயின் தற்போதைய நிலைமை ஆகியவற்றை கருத்திற்கொண்டு நோயாளர்களை அடையாளம் காண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய,
1. தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் அறிகுறிகள் அற்ற நிலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்படும் சந்தர்ப்பம்
2. அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி அற்ற நபர்கள் அடையாளம் காணப்படும் சந்தர்ப்பம்
3. அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கணிசமான நோயெதிர்ப்பு சக்தி உடைய நபர்கள் அடையாளம் காணப்படும் சந்தர்ப்பம்
ஆகிய மூன்று அடிப்படைகளின் கீழ் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், முதலாவது மற்றும் இரண்டாவது பிரிவுகளின் கீழ், கொரோனா தொற்று சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படும் நபர்களுக்கு, குறிப்பிட்ட காரணிகளின் அடிப்படையில் 14 நாள் தனிமைப்படுத்தல் அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறிப்பிட்ட காரணிகளின் அடிப்படையில் அடையாளம் காணப்படும் நபர்களை 10 நாட்கள் மாத்திரம், கொரோனா தொற்று சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைக்கு உட்படுத்தவும், ஏனைய 04 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.