மலர்ந்துள்ள 2021 தைத்திருநாளில், எமது அழகிய தாய்த் திருநாட்டில் வசிக்கும் இலங்கை வாழ் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவை (ACYMMAC) சார்பில் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் அக மகிழ்ச்சி அடைகின்றேன். இவ்வாறு, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, தனது தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
$ads={2}
அந்த பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
புதிய ஆரம்பத்தோடு புதிய பல எதிர்பார்ப்புக்களோடு நாம் இன்னுமொரு தைத்திருநாளில் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்நிலையில், கடந்த வருடம் நாம் விட்டுச்செல்லும் செயற்பாடுகளையும், அது இவ்வருடம் பிரதிபலிக்க வேண்டிய விதம் பற்றியும் நாம் எமது சிந்தனையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடந்துபோன 2020 ஆம் ஆண்டு, எங்களுக்கு பல புதிய அனுபவங்களைக் கொண்டு வந்து, புதிய பாடங்களைக் கற்றுத் தந்தது. இவ்வருடம் நாம் அவ்வாறான பாடங்களின் பின்னணியில் புதிய அனுபவங்களையும் படிப்பினைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
தந்தை செல்வா அவர்கள், தமிழினத்திற்காகவும், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும், அப்பொழுது கடுமையாக உழைத்துச் செயற்பட்டார். அந்த அவரது செயற்பாட்டின் பின்னணியில், இன்றைய தமிழ்ப் பேசும் உறவுகள் அத்தகைய நிலைப்பாட்டுக்குள் வரவேண்டியது, இன்றைய கால கட்டத்தின் கட்டாயத் தேவையாகும். தமிழ்ப் பேசும் மக்கள், ஒரு குழுவாக இயங்கி தமது உரிமைகளுக்காகச் செயற்பட வேண்டியதும், இன்றைய அவசியமாகும்.
இதேவேளை, தமிழ்ப் பேசும் உறவுகள் தங்களது முன்னோர்கள், மூதாதையர்கள் காட்டிச் சென்ற வழியில் பயணிப்பதும், தாம் தைத்திருநாள் புத்தாண்டில் புதியதொரு அத்தியாயத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு உந்து சக்தியாக அமையும். வரும் காலங்களில் நாம் பிரிந்து நிற்காமல், ஒரு குழுவாக நின்று எமது தாய் நாட்டுக்கு சமூக ஒற்றுமையைப் பறை சாற்ற வேண்டும். இதன்மூலம், எமது தவறிப்போன உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க, மிகச் சிறந்த சந்தர்ப்பமாக இது அமையும் என்ற நம்பிக்கையில் நாம் தைத்திருநாள் தினத்தில் திட சங்கற்ப உறுதி பூண வேண்டும்.
இலங்கையில் பிரசித்தி பெற்ற தேசிய அமைப்பு என்ற வகையில் இன, மத, கட்சி பேதங்களின்றி சகல மக்களுக்கும் எதுவித பாகுபாடுகளுமின்றி ஒருமித்த சேவைகளை ஆற்றிவரும் வை.எம்.எம்.ஏ. பேரவையின் சார்பில் தமிழ்ப் பேசும் உறவுகளுக்கு, மீண்டும் எனது தீபத்திருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
ஒற்றுமையே எங்கள் பலம்!
தமிழ்ப் பேசும் நாங்கள் ஒன்றுபடுவோம்!!
எமது உரிமைகளை வென்றெடுப்போம்!!!
-ஐ. ஏ. காதிர் கான்