நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கபடவுள்ளன.
இதன்படி, இந்தியாவினால் வழங்கப்பட்ட ASTRA ZENECA COVISHEILD எனும் கொரோனா தடுப்பூசி இன்றைய தினம் சுகாதார சேவையாளர்கள் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு செலுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்று தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 11,080 கொரோனா தடுப்பூசிகள் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்றைய தினம் முதல் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் எனவும் வைத்தியர் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு அமைவாக நேற்றைய தினம் 5,286 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வாறு தடுப்பூசி வழங்கபட்ட எவருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை எனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.