
புவிச்சரிதவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று இன்றைய தினம் கண்டி - திகன பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் செறிந்து வாழும் அம்பாக்கோட்டை பிரதேசத்திற்கு விரைந்தனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் இன்றுவரை மொத்தம் 07 நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து ஆய்வுசெய்வதற்காக மேற்படி குழு இன்று அங்கு விஜயம் செய்தது.
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஒருசில வீடுகள் அருகே நிலநடுக்கத்தை அளவிடும் அல்லது உணர்கின்ற கருவிகளை வைத்து சுண்ணாம்புக்கல் அகழ்வு செய்யப்படும் இடத்தில் வெடிப்புக்களை நிகழ்த்தி அதனை பதிவு செய்துள்ளனர்.
எனினும் நிலநடுக்கத்தின் போது சந்தேகிக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் அகழ்வு வெடிப்பு இன்று அந்த இயந்திரத்தில் பதிவாகவில்லை.
இதன் காரணமாக அண்மைய நாட்களாக ஏற்பட்ட நிலநடுக்கமானது சுண்ணாம்புக்கல் அகழ்வினால் ஏற்பட்டதல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்திருப்பதாக புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.