தமிழ், முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது. அவர்கள் தேர்தலுக்குப் பின்னர் விரும்பினால் எம்முடன் இணைந்து செயல்படலாம் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்து பாரிய காட்டிக்கொடுப்பை செய்துள்ளனர். அதனால் எதிர்காலத்தில் இந்த கட்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட இடமளிக்கக்கூடாது என்ற பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்காக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது. எனினும் தேர்தலில் எம்முடன் இணைந்து போட்டியிட்ட தமிழ் முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அவர்கள் வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் என்பதால் அவர்களை எமது கட்சியில் இருந்து நீக்குவதில் சட்டப் பிரச்சினை உள்ளது. எமது கட்சி உறுப்பினரை நாங்கள் கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம்.
அத்துடன் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் அவர்களின் கட்சி அரசியல் பீடத்தில் இது தொடர்பாக தீர்மானம் எதனையும் மேற்கொண்டிருக்காததால், அவர்களாலும் 20க்கு ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.
இதனால் தொடர்ந்து இவ்வாறு இடம்பெறுவதை தடுக்கும் வகையில் இந்த கட்சிகளுக்கு எதிர்காலத்தில் எமது கட்சியில் வேட்பனு வழங்கக்கூடாது என்ற பிரேரணையை கட்சிக்கு முன்வைத்திருக்கின்றேன்.
$ads={2}
எம்முடன் எப்போதும் இணைந்து செயற்படும் தமிழ், முஸ்லிம் அரசியலவாதிகளை உறுதிப்படுத்திக் கொண்டு, அவர்களை எமது கட்சியின் வேட்பாளர்களாக இணைத்துக் கொண்டு, அவர்களை மாத்திரம் எமது கட்சி வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எமது கட்சியில் இணைந்து போட்டியிட்டு வெறிபெற்ற பின்னர், நாடாளுமன்றத்தில் தீர்மானமிக்க சந்தர்ப்பங்களில் கட்சியைக் காட்டிக்கொடுத்த பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இவ்வாறு தொடர்ந்து செயற்பட முடியாது.
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் நீண்டகாலமாக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றன. அதனால் தொடர்ந்தும் இந்த கட்சிகளின் பிணையக்கைதியாக இருப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாரில்லை. 20 வருடமாக மேற்கொண்டுவந்த குருட்டுத்தனமான செயலை இதன் பின்னர் கட்சி மேற்கொள்ளாது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் அமுலில் இருந்தால், முஸ்லிம் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வை சாதாரண தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும். ஆனால் 20ஆவது திருத்தம் காரணமாக முஸ்லிம் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கின்றனர். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினால் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தம் இன்று அவர்களுக்கே அது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டுக்கு பாதிப்பான ஏகாதிபத்திய அரசியல் அமைப்பொன்றை கொண்டுவர ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக பொய்யான எதிர்ப்பை காட்டிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் இவ்வாறான இரட்டைவேட அரசியலுக்கு எதிராக முஸ்லிம் சமூகத்திலிருந்து பாரிய எதிர்ப்பு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.
- எம்.ஆர்.எம்.வஸீம்