கொரோனா தொற்றிலிருந்து தம்மை காப்பாற்ற வேண்டும் என்று கோரி மஹர சிறைச்சாலை கைதிகள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டமே பின்னர் வன்முறையாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை வன்முறை தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இந்த விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த அலி சப்ரி ஆரம்பத்தில் சிலர் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவித்திருக்கின்றார்.
இதன் பின்னர் இதனை குழப்பும் வகையில், பழிவாங்கல் அடிப்படையில் வேறு சில குழுக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தியதாகவும், இதன் பின்னர் ஒருவரை ஒருவர் கைதிகள் தாக்கி கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
$ads={2}
இந்த வன்முறையின் போது இரும்பு கம்பிகள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
அத்துடன் கைதிகள் சிலரால் சிறைச்சாலையில் உள்ள முக்கிய ஆவண பகுதியும் எரியூட்டப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கைதிகளை தனிமைப்படுத்தவும், ஏனைய கைதிகளை சுயதனிமைக்குட்படுத்தவும் விசாரணைக்குழு பரிந்துரை செய்திருப்பதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.