ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த 20ஆம் திகதியுடன் நிறைவு பெற்றுள்ளது.
$ads={2}
எனினும், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கு அமைய, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்குரிய பதவிக்காலத்தை நீடிப்பதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்ட நிலையில் அதன் பத்விக் காலம் 6 மாதங்களுக்கு வரையறுக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் ஏற்கனவே கடந்த 2020 மார்ச் மாதமும், பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் மாதமும் ஆணைக் குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்ப்ட்டது.
இந்நிலையிலேயே கடந்த 20ஆம் திகதியுடன் நிறைவடைந்த அவ்வாணைக் குழுவின் பதவிக் காலம் மீண்டுமொருமுறை 2021 ஜனவரி 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்றைய தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, ஏபரல் 21 பயங்கர்வாத தாக்குதலில் தெஹிவளை ட்ரொபிகல் இன் தங்கு விடுதியில் குண்டினை வெடிக்கச் செய்த ஜமீல் மொஹம்மட் எனும் குண்டுதாரியின் மனைவியான பாதிமா சிபானா ஒமர் கத்தாப்பிடம் சாட்சியம் பதிவு செய்தது.
போகம்பறை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரிடம், ஸ்கைப் தொழிநுட்பம் ஊடாக, ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் அருகிலிருந்த நிலையில் சாட்சியம் பதிவு செய்யப்ப்ட்டுள்ளது. இந்த சாட்சிப் பதிவை அறிக்கையிட ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
ஏற்கனவே முக்கிய தற்கொலை தாரியான சஹ்ரான் ஹஷீமின் மனைவியிடம் சாட்சியம் பதிவு செய்யும் போதும் ஆணைக் குழு ஊடகங்களுக்கு அனுமதி மறுத்திருந்தது.
இன்று வரையில் இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவானது 436 பேரின் சாட்சியங்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எம்.எப்.எம்.பஸீர்